இனப்படுகொலை குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத்தர ராமதாஸ் அறைகூவல்
தமிழர்களை கொன்று குவித்த இலங்கை தலைவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த இலக்கை நோக்கி போராட தமிழ்நாட்டு தலைவர்கள் அனைவரும் இனப்படுகொலை நாளான இன்று உறுதி ஏற்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டு தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கடலோரப் பகுதிகளில் மிகக் கொடூரமான முறையில் கொன்று குவிக்கப்பட்ட இந்த நாள் (மே18) உலக வரலாற்றில் துக்க நாள் ஆகும்.
இந்த நாளில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் அனைவருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம். அணு ஆயுத வல்லரசுகளின் உதவியுடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்பட்டு நாளையுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் போதிலும் இனப்படுகொலைக்கு காரணமானவர்களுக்கு இன்று வரை தண்டனை கிடைக்கவில்லை, இன்னுயிர் நீத்த தமிழர்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைத்து தனித் தமிழீழம் அமைப்பது குறித்து உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
அதற்கு முன்பாக 1999ஆம் ஆண்டில் கொசோவா நாட்டில் செய்யப்பட்டதை போன்று இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகள் உடனடியாக ஐ.நா.வின் நேரடி நிர்வாக வரம்புக்குள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சிங்களர்களும், சிங்களப்படைகளும் வெளியேற்றப்பட வேண்டும்.
தமிழர்களை கொன்று குவித்த இலங்கை தலைவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த இலக்கை நோக்கி போராட தமிழ்நாட்டு தலைவர்கள் அனைவரும் இனப்படுகொலை நாளான இன்று உறுதி ஏற்க வேண்டும் என்று என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.







Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it


















